" alt="" aria-hidden="true" />
தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை துர்காநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மலை உச்சியில் இந்திய சுவிசேஷ திருச்சபை தேவாலயம் உள்ளது. அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள இந்த தேவாலயத்தை அகற்றும்படி அப்பகுதியைச்சேர்ந்த தனிநபர்கள் 2 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து பல்லாவரம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர் அந்த தேவாலயத்தை அகற்ற ஜே.சி.பி. எந்திரத்துடன் நேற்று அங்கு சென்றனர். போலீஸ் உதவி கமிஷனர்கள் அசோகன், சகாதேவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
ஆனால் தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பாஸ்டர் ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்தனர். மேலும் தேவலாயத்தின் கதவை பூட்டி உள்ளே அமர்ந்து கொண்டவர்களை வருவாய்த்துறையினர் வெளியேற்றினர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வெளியேற்றிய பின்னர் தேவாலயத்தை இடிக்கும் பணியை தொடங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றி சென்று அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வருவாய்துறையினர் கூறும்போது, “சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படியே போலீஸ் பாதுகாப்போடு தேவாலயம் இடிக்கப்படுகிறது. இதுபற்றி தேவாலய நிர்வாகத்துக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டோம்” என்றனர்.